பன்ட் இடத்தில் இஷான் கிஷான்: அசார் நம்பிக்கை | ஜனவரி 15, 2023

தினமலர்  தினமலர்
பன்ட் இடத்தில் இஷான் கிஷான்: அசார் நம்பிக்கை | ஜனவரி 15, 2023

அபுதாபி: ‘‘ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரிஷாப் பன்ட் இடத்தில் இஷான் கிஷான் களமிறங்குவார்,’’ என, முகமது அசார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தியா வரவுள்ள ஆஸ்திரேலிய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் பிப். 9ல் நாக்பூரில் துவங்குகிறது. மீதமுள்ள போட்டிகள் டில்லி (பிப். 17–21), தரம்சாலா (மார்ச் 1–5), ஆமதாபாத்தில் (மார்ச் 9–13) நடக்கவுள்ளன. இதன் முதலிரண்டு போட்டிகளுக்கான 17 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில், இளம் ‘விக்கெட் கீப்பர்–பேட்டர்’ இஷான் கிஷான் புதுமுக வீரராக இடம் பிடித்துள்ளார். இவர், சாலை விபத்தில் சிக்கிய ‘விக்கெட் கீப்பர்–பேட்டர்’ ரிஷாப் பன்ட்டிற்கு பதிலாக ‘லெவன்’ அணியில் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசார் கூறியது: சமீபத்திய செயல்பாட்டின் அடிப்படையில் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இஷான் கிஷானுக்கு இடம் கிடைத்துள்ளது. ‘லெவன்’ அணியில் இவருக்கு விக்கெட் கீப்பருக்கான இடம் கிடைக்கும் என்று நம்புகிறேன். ஏனெனில் இவர், ரிஷாப் பன்ட் போல இடதுகை பேட்டர்.

 

ஒரு வீரர் நல்ல ‘பார்மில்’ இருக்கும் போது, அவரை ‘பெவிலியனில்’ அமரவைக்கக் கூடாது. தற்போது ‘சூப்பர் பார்மில்’ உள்ள சூர்யகுமார், மூன்று வித போட்டிக்கும் தேர்வு செய்யப்பட வேண்டும். இவர், தனது கடைசி ரஞ்சி போட்டியில் சிறப்பாக விளையாடி உள்ளார். ரோகித், கோஹ்லி போல மூன்று வித போட்டியிலும் சூர்யகுமார் நீண்ட காலம் விளையாடுவார் என்ற நம்பிக்கை உள்ளது.

 

இவ்வாறு அசார் கூறினார்.

மூலக்கதை